ப. சிதம்பரத்தின் சர்ச்சைக்குரிய கருத்து: விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு









 

மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்த குஜராத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த மாதம் 25-ம் தேதி தில்லியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசியபோது 'காவித் தீவிரவாதம்' என்கிற வார்த்தையை மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் பயன்படுத்தினார். இந்நிலையில், அவரது கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து குஜராத்தைச் சேர்ந்த சுவாமி நிஜானந்த் தீர்த் என்பவர் ஆமதாபாத் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
"காவி நிறம் என்பது இந்து மதம் மற்றும் துறவிகளின் அடையாளமாக உள்ளது. அது கடவுள், அமைதி, தியாகம் ஆகியவற்றின் அடையாளமாக திகழ்கிறது. 'காவித் தீவிரவாதம்' என்கிற வார்த்தையை பயன்படுத்தியதன் மூலம் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் லட்சக்கணக்கான இந்துக்களின் மனதை புண்படுத்தியுள்ளார். இத்தகைய நடவடிக்கையில் ஈடுபடுவோரை தண்டிக்க வேண்டும்." என்று சுவாமி நிஜானந்த் தீர்த் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
ஆமதாபாத் பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதி எம்.ஜி. தவே முன்னிலையில், அந்த மனு இன்று விசாரணைக்கு வந்ததது. இதில், சர்ச்சைக்குரிய பேச்சு குறித்து எஸ்.பி. அந்தஸ்தில் உள்ள போஸீஸ் அதிகாரி விசாரணை நடத்தி 90 நாட்களுக்குள் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

  தமிழ் எழுத்தாளர் மாநாட்டை சென்னையில் நடத்தலாம்: கா. சிவத்தம்பி
 

தமிழ் எழுத்தாளர் மாநாட்டை கொழும்பில் நடத்துவதை விட சென்னையில் நடத்தினால் சிறப்பாக இருக்கும் என்று இலங்கையைச் சேர்ந்த தமிழறிஞர் கா. சிவத்தம்பி கருத்து தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சர்வதேச தமிழ் எழுத்தாளர் மன்றம் சார்பில் வரும் டிசம்பர் மாதம் கொழும்பில் தமிழ் எழுத்தாளர் மாநாடு நடைபெறவுள்ளது.
ஆனால், இதற்கு சிவத்தம்பி எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
"தமிழ் எழுத்தாளர் மாநாட்டை இலங்கையில் நடத்த இது சரியான நேரம் அல்ல. இந்த மாநாட்டுக்கு இலங்கை அரசு அரசியல் சாயம் பூச முயற்சி செய்கிறது. எனவே, மாநாடு பிரச்னைக்குரிய விவகாரமாக மாறிவிடும்." என்று சிவத்தம்பி கூறியுள்ளதாக அந்த இணையதளங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  அமைச்சரவை மாற்றியமைப்பு: பிரதமர் சூசகம்
 

நவம்பர் 7-ல் தொடங்கும் நாடாளுமன்றத்தின் அடுத்த கூட்டத்தொடருக்கு முன்பாக மத்திய அமைச்சரவையை மாற்றி அமைக்க உள்ளதாக பிரதமர் மன்மோகன் சிங் இன்று சூசகமாகக் குறிப்பிட்டார்.
அமைச்சரவையின் சராசரி வயதைக் குறைக்க விரும்புகிறேன் என அவர் புன்முறுவலுடன் கூறினார்.
அரசுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையே தொடர்பில்லாமல் உள்ளது என்று கூறப்படுவதை அவர் மறுத்தார். அமைச்சர்களும், கட்சி நிர்வாகிகளும் பல்வேறு கோணங்களில் கருத்துக்களைத் தெரிவிப்பதில் தவறு எதுவும் இல்லை என்ற அவர், காங்கிரஸ் ஜனநாயகரீதியில் செயல்படும் இயக்கம் என்பதால் அதில் பலவிதமான கருத்துகளும் இருக்கும் எனக் குறிப்பிட்டார்.

  அக்ஷர்தாம் வழக்கு: 2 பேரின் மரண தண்டனைக்கு உச்சநீதிமன்றம் தடை
 

2002-ம் ஆண்டு குஜராத்தில் அக்ஷர்தாம் கோயிலில் நடத்தப்பட்ட தாக்குதல் வழக்கில் 2 தீவிரவாதிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த மரணதண்டனைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.
இவ்வழக்கில் தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து அந்த இருவரும் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், அவர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை நிறைவேற்றத் தடை விதித்தது. இதுதொடர்பாக குஜராத் அரசுக்கும், சிபிஐக்கும் நோட்டீஸ் அனுப்பவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
அக்ஷர்தாம் கோயில் மீது நடத்தப்பட்ட மிகப் பயங்கரமான தாக்குதலில் 37 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலி்ல் சுலைமான் மற்றும் முஃப்தி ஆகியோருக்கு பொடா நீதிமன்றம் 2006 ஜூலையில் மரண தண்டனை விதித்தது. இந்த ஆண்டு ஜூன் மாதம் அந்த தண்டனையை குஜராத் உயர்நீதிமன்றமும் உறுதிசெய்திருந்தது.
இதையடுத்து அவர்கள் இருவரும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

  தகவல் ஆணையர் நியமனக் குழு கூட்டத்தில் கலந்துகொள்ளாதது ஏன்?: ஜெயலலிதா விளக்கம்
 

தான் கோரிய விவரங்களை அரசு அளிக்காததால்தான் தலைமை தகவல் ஆணையர் நியமனக் குழு கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா விளக்கம் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
2005-ஆம் ஆண்டு தகவல் உரிமை சட்டத்தின்படி, தலைமைத் தகவல் ஆணையரையும், தகவல் ஆணையர்களையும் முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் முதல்வரால் தெரிவு செய்யப்படும் ஓர் அமைச்சர் ஆகியோர் அடங்கிய குழு தேர்வு செய்ய வேண்டும்.  
2005 ஆம் ஆண்டு தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்படி, முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் முதல்வரால் தேர்வு செய்யப்படும் ஓர் அமைச்சர் தான் மேற்படி கூட்டத்தில் கலந்து கொள்ள முடியுமே தவிர, பிரதிநிதிகளை நியமிப்பதற்கான உரிமை குழு உறுப்பினர்களுக்குக் கிடையாது.  2005-ஆம் ஆண்டு நான் முதல்வராக இருந்த போது நடைபெற்ற கூட்டத்தில், கருணாநிதி தனக்கு பதிலாக அன்பழகனை அனுப்பி வைக்கவில்லை. அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் தான் அன்பழகன் கலந்து கொண்டார்.
குழுக் கூட்டத்தில் கலந்துகொள்ள ஏதுவாக, குழுவின் உறுப்பினர் என்ற முறையில் தலைமை தகவல் ஆணையர் பதவிக்கு விண்ணப்பித்தவர்களின் பெயர்களை அரசிடம் கோரியிருந்தேன்.  ஆனால், அரசு அந்த விவரங்களை அளிக்கவில்லை.  எனவே,  எந்த விதமான விவரமும் இன்றி கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துகளை தெரிவிக்க முடியாது என்பதால் தான் அந்தக் கூட்டத்திற்கு செல்லவில்லை.  நான் கோரிய விவரங்களை அரசு அளித்திருக்குமேயானால், அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டிருப்பேன்.
மேற்படி குழுவில் எதிர்க்கட்சித் தலைவரை நியமித்ததற்குக் காரணமே, வெளிப்படையான முறையில் தலைமை தகவல் ஆணையர் மற்றும் தகவல் ஆணையர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்பதற்காகத் தான்.
நான் கோரிய விவரங்களை தி.மு.க. அரசு அளிக்காததால் தான்  தலைமை தகவல் ஆணையர் நியமனக் குழு கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் நான் கலந்து கொள்ளவில்லை என்பதையும்; நியமனக் குழு உறுப்பினர் என்ற முறையில் எனக்கு விவரங்கள் அளிக்காமல் தலைமை தகவல் ஆணையர் நியமனம் செய்யப்பட்டதன் மூலம், இந்த நியமனம் வெளிப்படையான முறையில் நடைபெறவில்லை என்பதையும், தி.மு.க. அரசின் நடவடிக்கை சட்டத்திற்குப் புறம்பான செயல் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

  திருவாரூர்-திருவிடைச்சேரியில் குழுமோதலில் 2 பேர் சுட்டுக் கொலை
 

திருவிடைச்சேரியில் இரு குழுக்களுக்கிடையே நேற்று இரவு ஏற்பட்ட மோதலில் 2 பேர் உயிரிழந்தனர். 5 பேர் படுகாயமடைந்தனர்.
திருவாரூர் மாவட்டம் திருவிடைச்சேரியில் நேற்று இரவு இரண்டு இஸ்லாமியக் குழுக்களுக்கிடையே தொழுகை விஷயமாக கருத்து மோதல் ஏற்பட்டது. ஜமாத் மீது அதிருப்தி கொண்டிருந்த சிலர், வாகனங்களில் வந்து, தொழுகை முடிந்த பிறகு பிரச்னையில் ஈடுபட்டனர். அப்போது, எதிர்த் தரப்பில் துப்பாக்கி வைத்திருந்த ஒரு நபர் சுட்டதில், ஜமாத்தின் தலைவர் உள்ளிட்ட இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். 5 பேர் படுகாயமடைந்தனர்.
இதைத் தொடர்ந்து அங்கே பதற்றமான சூழல் நிலவுகிறது. அந்தப் பகுதியில் தஞ்சாவூர் - திருவாரூர் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

  சிபிஐ நீதிமன்றத்தில் லாலு ஆஜர்
 

மாட்டுத்தீவன ஊழல் வழக்கு தொடர்பாக ராஷ்ட்ரீய ஜனதாதளத் தலைவர் லாலு பிரசாத் யாதவ், பிகார் முன்னாள் அமைச்சர் ஜகன்னாத் மிஸ்ரா உள்ளிட்டோர் சிபிஐ நீதிமன்றத்தில் இன்று ஆஜராயினர்.
தனது வழக்கறிஞர் சித்தரஞ்சன் சின்ஹாவுடன் லாலு நீதிமன்றத்துக்கு வந்து தான் நேரில் ஆஜரானதைப் பதிவுசெய்தார்.
முன்னதாக லாலு முதல்வராக இருந்தபோது பங்கா மற்றும் பாகல்பூர் கருவூலங்களில் இருந்து ரூ 46 லட்சம் முறைகேடாக பெறப்பட்டது தொடர்பான வழக்கில் நேரில் ஆஜராகுமாறு லாலுபிரசாத் உள்ளிட்டோரை சிபிஐ நீதிமன்ற நீதிபதி விமல்குமார் ஜெயின் கேட்டுக்கொண்டிருந்தார்.
லாலுவுடன், ஐக்கிய ஜனதாதள எம்பி ஜகதீஷ் சர்மா, ராஷ்ட்ரீய ஜனதாள முன்னாள் எம்பி ஆர்.கே.ராணா, முன்னாள் அமைச்சர் வித்யாசாகர் நிஷாத் மற்றும் ஓய்வுபெற்ற சில ஐஏஎஸ் அதிகாரிகள் ஆகியோரும் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள்.

  காமன்வெல்த் போட்டி பாதுகாப்பு: நாளை தில்லி போலீஸிடம் ஒப்படைப்பு
 

தில்லியில் காமன்வெல்த் போட்டிகள் நடைபெறும் இடங்கள் மற்றும் வீரர்கள் தங்குமிடங்கள் ஆகியவற்றுக்கான பாதுகாப்பு பொறுப்பை நாளை முதல் தில்லி போலீஸார் ஏற்கின்றனர்.
இத்தகவலை மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
80 ஆயிரம் தில்லி போலீஸார், 17,500 துணை ராணுவப் படையினர், 3000 அதிரடிப்படை கமான்டோ வீரர்கள் ஆகியோர் காமன்வெல்த் போட்டியின் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

   
Copyright © 2010 Kadayanallur.net . All rights reserved. Site Powered By IT HIGHWAY