Doctor Details Colleges Auto Number Free Ringtone Free Wallpaper Free Themes      
     
  உத்தரப்பிரதேச ஆஸ்ரமத்தில் நெரிசலில் சிக்கி 65 பேர் பலி







 

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள கிருபாலு மஹராஜ் ஆஸ்ரமத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 65 பேர் உயிரிழந்தனர். இதில் 15 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து உயர்நிலை விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
பிரதாப்கர் மாவட்டத்தில் உள்ள இந்த ஆஸ்ரமத்தில் வியாழக்கிழமை 10 ஆயிரம் பேர் திரண்டிருந்தனர். உணவு வழங்கும்போது கூட்டத்தினர் வேகமாக முன்னேறினர். இதில் ஆஸ்ரமத்தின் கதவு கூட்டத்தினர் மேலே விழுந்தது.
கிருபாலு மஹராஜின் மனைவி நினைவு நாளன்று இங்குள்ள பக்தர்களுக்கு உணவு மற்றும் பாத்திரங்கள் வழங்கப்படுவது வழக்கம். இதைப் பெறுவதற்காக பெருமளவில் மக்கள் திரண்டிருந்தனர். உணவு வழங்குவது ஆரம்பமானதும் கூட்டத்தினர் அலைமோதினர்.
இதனால் வாயில்கதவு கீழே விழுந்தது. அப்போது சிலர் கீழே விழுந்தனர். கீழே விழுந்தவர்களின் மீது மற்றவர்கள் ஏறி ஓடினர். இதில் கீழே விழுந்தவர்கள் மிதிபட்டு மூச்சுத் திணறி உயிரிழந்தனர். காயமடைந்தவர்கள் அனைவரும் பிரதாப்கரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகளாவர் என்று இம்மாவட்ட கோட்ட துணை ஆட்சியர் சியாமா சரண் தெரிவித்தார்.
மக்களவையில்...:
உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஏற்பட்ட இந்த சம்பவம்  குறித்து உறுப்பினர்களின் கவனத்துக்குக் கொண்டு வந்தார் சமாஜவாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ். இதுகுறித்து மாநில அரசிடமிருந்து உரிய விளக்கத்தை மத்திய அரசு கேட்டுப் பெற வேண்டும் என்று வலியுறுத்தினார்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ. 5 லட்சம் வழங்க வேண்டும் என்று பிரதாப்கர் தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் ரத்னா சிங் வலியுறுத்தினார்.
7ஆண்டுகளில் 800 பேர் நெரிசலில் பலி
கோவில் மற்றும் வழிபாட்டுத்தலங்களில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி கடந்த 7 ஆண்டுகளில் 800 பேர் பலியாயினர்.
2008-ம் ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதி ராஜஸ்தான் மாநிலத்தில் சாமுண்டி தேவி ஆலயத்தில் நேரிட்ட நெரிசலில் சிக்கி 150 பேர் உயிரிழந்தனர்; 60 பேர் காயமடைந்தனர். வெடிகுண்டு வெடிக்கப் போவதாக ஏற்பட்ட புரளியால் இந்த நெரிசல் ஏற்பட்டது.
இமாசலப் பிரதேசத்தில் உள்ள நயன தேவி ஆலயத்தில் ஆகஸ்ட் 3, 2008-ல் நிகழ்ந்த நெரிசலில் 150 பேர் உயிரிழந்தனர். இதில் 230 பேர் காயமடைந்தனர்.
இவையிரண்டும் மிக அதிக எண்ணிக்கையிலானோர் உயிரிழந்த சம்பவங்களாகும்.
விசாரணைக்கு உத்தரவு
இந்த சம்பவம் குறித்து அலாகாபாத் கோட்ட ஆணையர் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. விசாரணை அறிக்கையை 24 மணி நேரத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் மாநில அரசு தெரிவித்துள்ளது.
இந்த சம்பவத்துக்குக் காரணமானவர்கள் குறித்து அறிக்கையில் குறிப்பிடுமாறு கூறப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில அமைச்சரவைச் செயலர் சசாங் சேகர் சிங் கூறினார்.
இது தொடர்பாக குற்றப் பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மிகச் சிறிய இடத்தில் பெரும் எண்ணிக்கையில் மக்கள் திரண்டதால் இந்த சம்பவம் நிகழ்ந்ததாகத் தெரிகிறது என்று அவர் கூறினார்.

  சாமியார்களின் தவறுகளை அரசு வேடிக்கை பார்க்காது: முதல்வர் கருணாநிதி
 

சமுதாயத்தைச் சீரழிக்கின்ற சாமியார்களின் தவறுகளை தமிழக அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது என்று முதல்வர் கருணாநிதி எச்சரித்துள்ளார்.
இது குறித்து அவர் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
பாமர மக்களின் வாழ்வையும், அறிவையும் பாழாக்கி வருகின்ற, பணக் கொள்ளை அடிக்கின்ற பகல் வேடக்காரர்களை, மக்களுக்கு அடையாளம் காட்ட, பகுத்தறிவு இயக்கம் பல்லாண்டு காலமாக, பல சான்றுகளைக் காட்டி, பலத்த எதிர்ப்புகளுக்கு இடையிலும் பிரசாரம் செய்து வருகிறது.
சந்திரகாந்தா, சொர்க்கவாசல், மனோகரா, வேலைக்காரி, பராசக்தி, தூக்குமேடை போன்ற படங்கள், நாடகங்கள் மூலம் காவியுடைதாரிகளின் கபட நாடகத்தை எடுத்துக் காட்டியது.
எனினும், இதையெல்லாம் இன்னும் புரிந்து கொள்ளாத, புரிந்து கொண்டாலும், திருந்திக் கொள்ள இயலாதோர் நாட்டில் இருக்கத்தான் செய்கிறார்கள்.
சமூக நலனும், கண்ணியமும் காக்கப்பட வேண்டுமென்று, அவற்றில் அக்கறை காட்டுகிற ஒரு மக்கள் நல அரசு, அண்மையில் நடைபெற்றதாகக் கூறப்படும் கயமைத்தனமான சாமியார்களின் ஏமாற்று வித்தைகளை பொறுத்துக் கொண்டிருக்க முடியாது.
ஊடகங்களின் பொறுப்புணர்வு: குற்றங்கள் எப்படி, எங்கே, யாரால் நடத்தப்பட்டன என்பதைச் சான்றாகக் காட்ட, பத்திரிகைகளிலோ, தொலைக்காட்சிகளிலோ காட்டப்படும் செய்திகளும், படங்களும் அளவுக்கு அதிகமாக இருந்தால், அவை இளையோர் நெஞ்சங்களில் மோசமான மாறுதல்களை ஏற்படுத்தும். இதை, எதிர்காலத் தலைமுறை மீது அக்கறை கொண்ட அனைவரும் எண்ணிப் பார்த்து நடந்து கொள்ள வேண்டும்.
அண்மையில் வெளிவந்துள்ள செய்திகள், அதனைத் தொடர்ந்து வருகின்ற செய்திகள் எவையாயினும் அவற்றை விவரம் அறிந்தோர், அரசுக்கும், காவல் துறைக்கும் தெரிவிக்க வேண்டும். மாறாக, தாங்களே முன்னின்று அவற்றை வெளிச்சம் போட்டுக் காட்டுவது தேவையற்றது. இது தீயவர்கள் தங்கள் செயலை நியாயப்படுத்த வலிமை சேர்ப்பதாக ஆகிவிடும்.
"அருவருக்கத் தக்க செய்திகள் மற்றும் படங்களை வெளியிடுவது முள்ளை முள்ளால் எடுக்கும் காரியம்தானே" என்று சில ஏடுகளும், தொலைக்காட்சி நிறுவனங்களும் வாதிடலாம்.
போதையேற்றும் கள் அருந்தியவனை, மேலும் கள்ளை ஊற்றி திருத்த முடியுமா? அதுபோலவே, இந்தச் செய்திகளும், படங்களும் சமூகத்தை மேலும் சீரழித்து விடக் கூடாதே என்ற கவலையோடு அரசின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
பக்தி வேடம் பூண்டு, பாமர மக்களை படுகுழியில் தள்ளுகின்ற பகல் வேடக்காரர்களையும், அவர்களிடம் சிக்கி பலியாகி, சமுதாயத்தைச் சீரழிக்கின்ற சபல புத்தி உடையவர்களையும் இந்த அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது. அரசு எடுக்கின்ற நடவடிக்கைகளுக்கு அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி கேட்டுக் கொண்டுள்ளார்.

  படக்காட்சியில் வருவது நித்யானந்தா இல்லை: ஆஸ்ரம நிர்வாகி, வழக்கறிஞர் பேட்டி
 

நித்யானந்தா இருப்பது போல தனியார் தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைகளில் வெளியான படக்காட்சிகள் முற்றிலும் பொய்யானவை என அவரது மக்கள் தொடர்பு அதிகாரி ஆத்ம கிருபானந்தா, வழக்கறிஞர் ஸ்ரீதர் ஆகியோர் மறுத்துள்ளனர்.
இது தொடர்பாக இவர்கள் இருவரும் சென்னையில் கூட்டாக நிருபர்களிடம் கூறியது:
கிராபிக்ஸ் மற்றும் அதிநவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி தயாரிக்கப்பட்டிருக்கும் இந்த ஒளிப்பதிவுகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. நித்யானந்தத்தின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கத்தில் இதை வெளியிட்டவர்கள் மீது சட்டரீதியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
தனியார் தொலைக்காட்சியினர் தங்களுக்கு கிடைத்த படக்காட்சிகளில் இருப்பவர் நித்யானந்தாதானா என்பதை எங்களிடம் கேட்டு உறுதிப்படுத்தவில்லை. அந்த காட்சிகளில் இருப்பது நித்யானந்தா இல்லை.
முதல்நாளில் அதில் வரும் பெண்ணின் முகத்தை மறைத்து வெளியிட்டவர்கள் அடுத்தநாள் அவரது முகத்தை தெளிவாகக் காட்டினர். இதற்கு இடைப்பட்ட சமயத்தில் நடந்தது என்ன?
இந்த படக்காட்சிகள் யாரால், எங்கு, எப்போது, எதற்காக எடுக்கப்பட்டது என்பது குறித்து தனியார் தொலைக்காட்சி சார்பில் உறுதியான தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
அந்த படக்காட்சியில் இருப்பவர் நித்யானந்தா இல்லை. ஆனால், இதை இப்போதைய சூழலில் நிருபிக்கும் நிலையில் நாங்கள் இல்லை.
அடையாளம் தெரியாத சிலர் நித்யானந்தா வேறு பெண்களுடன் இருப்பது போல கிராபிக்ஸ் மூலம் உருவாக்கப்பட்ட படங்களை இ-மெயில் மூலம் அனுப்பி வந்தனர். இவ்வாறு அனுப்பி எங்களை தொந்தரவு செய்த கும்பலே இந்த சதியின் பின்னணியிலும் இருப்பார்கள் என தெரியவந்துள்ளது. அந்த கும்பலை கண்டுபிடிக்க வேண்டியது காவல் துறையின் பொறுப்பு.
கும்பமேளா நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றுள்ள நித்யானந்தா விரைவில் மக்கள் முன்பு தோன்றி இது தொடர்பாக உரிய விளக்கம் அளிப்பார் என்று அவர்கள் தெரிவித்தனர்.

  பென்னாகரம் இடைத்தேர்தல்: அதிமுக வேட்புமனு
 

பென்னாகரம் இடைத்தேர்தலில் போட்டியிட அதிமுக வேட்பாளர் டி.ஆர். அன்பழகன் பென்னாகரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை  வேட்புமனுத் தாக்கல் செய்தார்.
மனு தாக்கல் தொடங்கிய இரண்டாவது நாளான வியாழக்கிழமை அதிமுக வேட்பாளர் டி.ஆர். அன்பழகன், பென்னாகரம் வட்டாட்சியர் அலுவலகத்தில், உதவி தேர்தல் அலுவலர் டியூக். பொன்ராஜிடம் காலை 11.30 மணிக்கு வேட்புமனுத் தாக்கல் செய்தார்.
மேலும் அவரே கூடுதலாக 3 வேட்புமனுக்களையும் தாக்கல் செய்துள்ளார். அவருக்கு மாற்று வேட்பாளராக பாப்பாரப்பட்டியைச் சேர்ந்த அதிமுக ஒன்றியச் செயலர் எம். வேலுமணி (47) வேட்புமனுத் தாக்கல் செய்தார்.
அதிமுக கொள்கைப் பரப்புச் செயலர் டாக்டர் மு.தம்பிதுரை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் பி. இளம்பரிதி, மதிமுக மாவட்டச் செயலர் சம்பத் ஆகியோர் அப்போது உடனிருந்தனர்.
சொத்து ரூ.60 லட்சம்: அதிமுக வேட்பாளர் டி.ஆர். அன்பழகன், வேட்புமனு தாக்கலின்போது தனக்கு அசையா சொத்துகளாக தாளப்பள்ளத்தில் சொந்த வீடு, நிலம் உள்ளது. மேலும் அசையும் சொத்துகளாக ஸ்கார்பியோ கார், 2 லாரிகள், வங்கியில் ரூ.60 ஆயிரம் ரொக்கம் உள்ளது. மொத்த சொத்து மதிப்பு ரூ.60 லட்சம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
வேட்புமனு தாக்கல் 10-ம் தேதி முடிவடைகிறது. மார்ச் 11-ம் தேதி வேட்புமனு பரிசீலனை செய்யப்படுகிறது. வேட்புமனுவைத் திரும்ப பெற மார்ச் 13 கடைசி நாளாகும். வாக்குப் பதிவு மார்ச் 27-ம் தேதியும், வாக்கு எண்ணிக்கை 30-ம் தேதியும் நடைபெறுகிறது.

  பெட்ரோல் விலை உயர்வு: திமுகவின் எதிர்ப்பு குறைகிறது
 

பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வுக்கு முதலில் எதிர்ப்பு தெரிவித்த திமுக, தற்போது எதிர்ப்பின் தீவிரத்தைக் குறைத்துள்ளது.
பட்ஜெட் உரையின்போது பெட்ரோலியப் பொருள்களின் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக தலைவர் கருணாநிதி, பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார். ஆனால் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது வியாழக்கிழமை ஆதரித்துப் பேசிய மாநிலங்களவை திமுக உறுப்பினர் திருச்சி சிவா, காங்கிரஸடன் கூட்டணி வைத்துள்ளதால் திமுக இணைந்து செயல்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. ஒரு மாட்டு வண்டியை நேரான பாதையில் இழுத்துச் செல்லும் இரு மாடுகளைப் போல மத்திய அரசு சரியான பாதையில் செல்வதற்கு காங்கிரஸ் மற்றும் திமுக.வின் செயல்பாடு ஒருங்கே அமையவேண்டும் என்றார்.
அவர் மேலும் கூறியதாவது: 2010-11 பட்ஜெட்டில் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, உற்பத்தி மற்றும் இறக்குமதி வரிகளில் மாற்றம் செய்துள்ளதைத் தொடர்ந்து பெட்ரோலியப் பொருள்களின் விலை உயர்ந்துள்ளது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் வளர்ச்சிப் பணிகளுக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது  என்றார்.
குடியரசுத் தலைவர் உரை: பிரதமர் இன்று பதில்
புது தில்லி, மார்ச் 4: குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் மன்மோகன் சிங் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வெள்ளிக்கிழமை பதிலளிக்கிறார்.
பட்ஜெட் கூட்டத்தொடரையொட்டி குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல், கடந்த வாரம் நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் உரை நிகழ்த்தினார். அவரது உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மக்களவையில் கேள்வி நேரத்துக்குப் பிறகு பிரதமர் மன்மோகன் சிங் பதிலளிக்கிறார்.

  நெசவாளர்களின் கடன்களையும் ரத்து செய்ய பரிசீலனை: தயாநிதி மாறன்
 

விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்ததைப் போல நெசவாளர்களின் கடன்களையும் தள்ளுபடி செய்வது குறித்து மத்திய அரசு தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது என்றார் மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறன்.
மக்களவையில் வியாழக்கிழமை கேள்வி நேரத்தின்போது துணைக் கேள்விகளுக்குப் பதில் அளிக்கையில் இந்தத் தகவலை அவர் தெரிவித்தார்.
நெசவாளர்கள் படும் துயரை அரசு அறியும். விவசாயிகளின் கடன்களை ரத்து செய்ததைப் போல நெசவாளர்களின் கடன்களையும் ரத்து செய்து அவர்களுக்கு நிவாரணம் அளிக்க அரசு முடிவு செய்திருக்கிறது. இப்போது இந்த யோசனை நிதி அமைச்சகத்தின் பரிசீலனையில் இருக்கிறது.
நாடு முழுவதும் உள்ள நெசவாளர்கள் எண்ணிக்கை, அவர்கள் அரசு வங்கிகளில் வாங்கியுள்ள கடன் தொகை போன்ற விவரங்கள் திரட்டப்படுகின்றன. உரிய நேரத்தில் இது பற்றி முடிவு எடுக்கப்படும் என்றார் மாறன்.
நெசவாளர்களுக்காக அரசு தொடங்கிய இன்சூரன்ஸ் திட்டத்தை கடந்த ஆண்டு 17 லட்சம் நெசவாளர்கள் பயன்படுத்திக் கொண்டனர் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த ஆண்டு இந்த திட்டத்தைப் பயன்படுத்திக் கொண்ட நெசவாளர்களின் எண்ணிக்கை 18 லட்சம் என்றார்.
 நாடு முழுக்க 25.24 லட்சம் கைத்தறி உற்பத்திப் பிரிவுகள் உள்ளன என்றும் கேரளம், ஒரிசா ஆகிய மாநிலங்களில் உள்ள சிலவற்றைத் தவிர பிற மாநிலங்களில் இவை செயல்படுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.
கேரளத்தில் 68 கைத்தறி கூட்டுறவுச் சங்கங்களும் ஒரிசாவில் 733 கைத்தறி கூட்டுறவுச் சங்கங்களும் செயல்படவில்லை என்றார்.
சர்வதேச அளவில் காணப்படும் பொருளாதாரத் தேக்க நிலையால் 2008-09 ஆம் ஆண்டில் கைத்தறி உள்ளிட்ட ஜவுளி ஏற்றுமதி அளவு 5.45% குறைந்தது என்று அவர் தெரிவித்தார்.
கடந்த காலாண்டு முதல் ஜவுளி ஏற்றுமதி மீண்டும் சூடுபிடித்து வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

   
Copyright © 2010 Kadayanallur.net . All rights reserved. Site Powered By IT HIGHWAY