குற்றாலத்தில் சீசன் காலம் முடிவடைந்த பின்னரும் இதமான தென்றல்
குற்றாலத்தில் சீசன் காலம் முடிவடைந்த பின்னரும் இதமான தென்றல் காற்று வீசுகிறது. அருவிகளில் குறிபிடத்தக்க அளவு தண்ணீர் கொட்டுகிறது. நேற்று மதியம் வரை வெயிலும், மதியத்திற்கு பிறகு சற்று இதமான சூழலும் நிலவியது. மெயினருவியில் ஆண்கள் குளிக்கும் பகுதியில் நன்றாகவும், பெண்கள் குளிக்கும் பகுதியில் சுமாராகவும் தண்ணீர் விழுகிறது. ஐந்தருவியில் நான்கு பிரிவுகளில் தண்ணீர் கொட்டுகிறது.
பழையகுற்றால அருவி, புலியருவி ஆகியவற்றில் தண்ணீர் சுமாராக விழுகிறது. கடந்த சில தினங்களாக சுற்றுலாபயணிகளின் வருகை மிகவும் குறைவாக இருந்த நிலையில் விடுமுறை தினமான நேற்று சுற்றுலா பயணிகள் கூட்டம் ஓரளவு காணப்பட்டது.
குற்றால சீசன் நிறைவடைந்த பிறகும் பேரருவியில் தண்ணீர் நன்றாக விழுகிறது. சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளிக்கின்றனர்.
குற்றாலம் அருவிகளில் தண்ணீர் கொட்டுகிறது
"தென் மாவட்டங்களில் 19 பொறியியல் கல்லூரிகள் தகுதியற்றவை'
தென் மாவட்டங்களில் உள்ள 19 சுயநிதி பொறியியல் கல்லூரிகள் "பொறியியல் பாடங்களை நடத்த தகுதியற்றவை' என திருநெல்வேலி அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம் பட்டியலிட்டுள்ளது.
இந்த பொறியியல் கல்லூரிகள் அனைத்தும் அவற்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள குறைபாடுகளை சரிசெய்து அண்ணா பல்கலைக்கழகத்துடனான இணைப்பை புதுப்பித்துக் கொள்ளாவிட்டால் சுமார் 4,000 மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும்.
அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகங்களுடன் இணைப்பு பெற்றுள்ள பொறியியல் கல்லூரிகள் அனைத்தும் ஆண்டுதோறும் இணைப்பை புதுப்பித்துக் கொள்ள வேண்டும். இணைப்பை புதுப்பித்துக் கொடுக்க பல்கலைக்கழகங்கள் சில விதிமுறைகளை வகுத்துள்ளன.
திருநெல்வேலி அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் விதிமுறைப்படி முக்கியமாக, கல்லூரிகளில் குறைந்தபட்சம் முதுநிலை பட்டம் பெற்ற ஆசிரியர்கள், பி.எச்.டி. பட்டம் பெற்ற கல்லூரி முதல்வர், 15 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் என்ற விகிதத்தில் ஆசிரியர்களின் எண்ணிக்கை, ஆய்வக வசதி (பாடத்தை நடத்துவதற்கேற்ற செய்முறை கருவிகள் மற்றும் கணினிகளுடன்), நூலகம், விடுதி வசதி, மாணவர்களுக்கு மருத்துவ வசதிக்கான ஏற்பாடுகள் உள்ளிட்டவை இருக்க வேண்டும்.
இணைப்பை புதுப்பிக்க பொறியியல் கல்லூரிகள் ஒவ்வோர் ஆண்டும் பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பித்தவுடன் பல்கலைக்கழக நிபுணர் குழுவினர் கல்லூரிகளுக்குச் சென்று ஆய்வு செய்து ஒவ்வொன்றுக்கும் மதிப்பெண்களை வழங்குவர். நான்கு ஆண்டுகளை கடந்த கல்லூரிகள் 70 மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும். மற்ற கல்லூரிகள் 65-க்கு மேல் பெற்றிருக்க வேண்டும். அதில், 70-க்கும் அதிகமான மதிப்பெண்கள் பெற்ற கல்லூரிகளுக்கு உடனடியாக இணைப்பு புதுப்பித்து கொடுக்கப்படும். 65 முதல் 70-க்குள் மதிப்பெண்கள் பெற்றுள்ள கல்லூரிகளில் காணப்படும் சிறு குறைபாடுகளை குறிப்பிட்ட காலத்திற்குள் நிவர்த்தி செய்துகொள்ள வேண்டும் என்ற நிபந்தனையுடன் இணைப்பு புதுப்பித்துக் கொடுக்கப்படும்.
அந்தக் கல்லூரிகள் குறைபாட்டை நிவர்த்தி செய்துவிட்டு பல்கலைக்கழகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அதற்கும் குறைவாக மதிப்பெண் பெற்றுள்ள கல்லூரிகள் அந்தக் குறைபாட்டை முழுவதுமாக நிவர்த்தி செய்துவிட்டு பல்கலைக்கழகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். பல்கலைக்கழக குழுவினர் மீண்டும் அந்த கல்லூரிகளை ஆய்வு செய்து மதிப்பெண் வழங்கி அதில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே இணைப்பு புதுப்பிக்கப்படும் என அண்ணா பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்தன.
திருநெல்வேலி அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் ஆளுகைக்கு உள்பட்ட திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் ஆகிய 4 மாவட்டங்களிலும் தற்போது 68 கல்லூரிகள் உள்ளன. இவற்றில் ஓர் அரசுக் கல்லூரி, பல்கலைக்கழக கல்லூரிகள் 2 என மொத்தம் 3 கல்லூரிகள் தவிர, எஞ்சிய 65-ம் சுயநிதி பொறியியல் கல்லூரிகள் ஆகும்.
இவற்றில் 21 கல்லூரிகள் மட்டுமே 70-க்கும் அதிகமான மதிப்பெண்கள் பெற்றுள்ளன. அவற்றுக்கு உடனடியாக இணைப்பு வழங்கப்படும். மேலும் 25 கல்லூரிகளில் உள்ள சிறு குறைபாடுகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. அவற்றை செப்டம்பர் முதல் வாரத்திற்குள் சரிசெய்ய வேண்டும் என்ற நிபந்தனையுடன் இணைப்பு வழங்கப்பட்டுவிடும்.
எஞ்சிய 19 கல்லூரிகள் 50-க்கும் குறைவான மதிப்பெண்களைப் பெற்றுள்ளன. அதிலும் சில கல்லூரிகள் 20-க்கும் குறைவான மதிப்பெண்களைப் பெற்றுள்ளன. இவற்றில் 9 கல்லூரிகள் கன்னியாகுமரி மாவட்டத்திலும், 7 கல்லூரிகள் திருநெல்வேலி மாவட்டத்திலும், 2 கல்லூரிகள் தூத்துக்குடி மாவட்டத்திலும், ஒரு கல்லூரி விருதுநகர் மாவட்டத்திலும் உள்ளன.
திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் சிறப்பு பெற்றதாகக் கூறப்படும் சில கல்லூரிகளும் இவற்றில் அடக்கம்.
ஐம்பதுக்கும் குறைவான மதிப்பெண்களைப் பெற்றுள்ள 19 கல்லூரிகளிலும் முக்கியமான குறைபாடாக இருப்பது தகுதிவாய்ந்த ஆசிரியர்கள் மற்றும் ஆய்வகங்கள் இல்லாமல் இருப்பதுதான். சில கல்லூரிகளில் பி.இ. மட்டும் படித்தவர்களை ஆசிரியர்களாக வைத்துள்ளனர். ஆய்வகங்களில் தேவையான கருவிகளும், எண்ணிக்கையிலும் இல்லாமலும் உள்ளன.
இந்த கல்லூரிகளுக்கெல்லாம் அவற்றில் உள்ள குறைபாடுகள் சுட்டிக்காட்டப்பட்டு அவற்றை நிவர்த்தி செய்ய அறிவுறுத்தப்படும். குறைபாடுகளை நிவர்த்தி செய்துவிட்டு பல்கலைக்கழகத்திற்கு தகவல் தெரிவித்தால் மீண்டும் பல்கலைக்கழக குழுவினர் அந்தக் கல்லூரிகளுக்குச் சென்று ஆய்வு நடத்தி விதிமுறை பூர்த்தி செய்யப்பட்டிருந்தால் இணைப்பு புதுப்பிக்கப்படும்.
கடந்த காலங்களில் பொறியியல் கல்லூரிகளுக்கு பல்கலைக்கழக ஆய்வுக் குழுவினர் செல்லும்போது வேறு கல்லூரிகளில் உள்ள ஆசிரியர்களை தாற்காலிகமாக அழைத்து வந்து கணக்கு காட்டி சரிசெய்து கொள்வதுண்டு. அதுபோல்தான் ஆய்வக கருவிகளும். ஆனால், தற்போது திருநெல்வேலி அண்ணா பல்கலைக்கழகமானது ஆசிரியர்களின் வருகைப் பதிவேட்டை "பயோமெட்ரிக்' முறையில் பதிவு செய்து வருகிறது. எனவே, இந்தப் பல்கலைக்கழக ஆளுகைக்கு வெளியே உள்ள மாவட்டங்களில் இருந்தோ அல்லது பாலிடெக்னிக் போன்ற இதர கல்வி நிறுவனங்களில் இருந்தோ ஆசிரியர்களை வரவழைத்து கணக்கு காட்டும் வழியை கல்லூரிகள் கையாளலாம் என கூறப்படுகிறது. ஆனால், அத்தகைய ஆசிரியர்கள் நிரந்தரமாக இருக்க மாட்டார்கள் என்பதால் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள்.
திருநெல்வேலி அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உள்பட்ட பொறியியல் கல்லூரிகளில் இந்தக் கல்வியாண்டில் சேர்ந்துள்ள சுமார் 13,000 மாணவர்களில் சுமார் 4,000 மாணவர்கள் இந்த "தகுதியற்ற' 19 கல்லூரிகளிலும் சேர்ந்துள்ளனர். எனவே, இந்தக் கல்லூரிகள் குறைபாட்டை நிவர்த்தி செய்து பல்கலைக்கழக இணைப்பை பெற்றுக் கொள்ளாவிட்டால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அதுமட்டுமன்றி பெற்றோர்களும், மாணவர்களும் இத்தகைய பொறியியல் கல்லூரிகளை அடையாளம் கண்டு அவற்றில் சேருவதைத் தவிர்க்க வேண்டும் என்கின்றனர் கல்வியாளர்கள்.
ஊழியர்கள் பற்றாக்குறையால் ரயில்வே கணினி மையங்கள் இயங்குவதில் சிக்கல்
ஊழியர்கள் பற்றாக்குறையால் ரயில்வே கணினி மையங்கள் செயல்பாட்டில் தடங்கல் ஏற்படுகிறது.
திருநெல்வேலி மற்றும் திருச்செந்தூர் ரயில் நிலையங்களில் கணினி முன்பதிவு மையங்கள் உள்ளன. இம்மையங்கள் காலை 8 மணிக்கு தொடங்கி இரவு 8 மணி வரை செயல்படுகின்றன.
திருநெல்வேலி - திருச்செந்தூர் இடையே காயல்பட்டினம், ஆறுமுகனேரி, குரும்பூர், கச்சனாவிளை, நாசரேத், ஆழ்வார்திருநகரி, ஸ்ரீவைகுண்டம், தாதன்குளம் ஆகிய ரயில் நிலையங்களில் கணினி முன்பதிவு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
பாளையங்கோட்டை மற்றும் செய்துங்கநல்லூர் ஆகிய ரயில் நிலையங்களில் முன்பதிவில்லா டிக்கெட் பெற கணினி வசதி ஏற்பட்டு இருந்தாலும் இங்கு முன்பதிவு டிக்கெட் எடுக்க முடியாது.
திருச்செந்தூரை தவிர இந்த ரயில் நிலையங்களில் ஏற்கெனவே பழைய அட்டை வடிவிலான டிக்கெட்களே விநியோகிக்கப்பட்டு வந்தன. அத்துடன் முன்பதிவு டிக்கெட்டும் அதே அட்டையில்தான் வழங்கப்பட்டன.
இந்த ரயில் நிலையங்களில் முன்பதிவு கணினி மையங்கள் அறிமுகப்படுத்தப்பட்டவுடன் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். "கணினி முன்பதிவு செய்ய திருச்செந்தூருக்கோ திருநெல்வேலிக்கோ செல்ல வேண்டாம், நம் ஊரிலேயே எந்த ஊருக்கும் செல்ல முன்பதிவு செய்யலாம்' என நினைத்தனர்.
ஆனால், கணினி முன்பதிவு மைய வசதிகள் ஏற்படுத்தப்பட்ட பிறகு அங்கு அதற்கான ஊழியர்கள் நியமிக்கப்படவில்லை. ரயில் நிலையங்களில் ஏற்கெனவே டிக்கெட் வழங்கி வரும் ஊழியர்கள்தான் இப்போது கணினியில் முன்பதிவு டிக்கெட் வழங்க வேண்டிய நிலை உள்ளது.
அதுவும் ஊழியர்கள் நினைத்தவுடன் கணினியை இயக்கி முன்பதிவு டிக்கெட் வழங்க முடியாது. ஒவ்வொரு ரயில் நிலையத்துக்கும் முன்பதிவு கணினி டிக்கெட் வழங்கும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
திருச்செந்தூர் மற்றும் திருநெல்வேலியை போன்று இந்த ரயில் நிலையங்களில் காலை 8 மணிக்கு கணினி முன்பதிவைத் தொடங்க முடியாத நிலை உள்ளது.
காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை திருநெல்வேலி - திருச்செந்தூர் இடையே ரயில் சேவை உள்ளது. இந்த நேரத்தில் ஊழியர் ரயில் பயணிகளுக்கு முன்பதில்லா டிக்கெட் வழங்க வேண்டும். அதன்பிறகு ரயில் வராத நேரங்களில் மட்டும் முன்பதிவு டிக்கெட் வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
ஒரே ஊழியர்தான் அன்றாட டிக்கெட்டையும் முன்பதிவு டிக்கெட்டையும் வழங்க வேண்டிய நிலை உள்ளது. எனவேதான் இந்த ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாக ரயில்வே அதிகாரிகள் கூறுகின்றனர்.
நாடு முழுவதும் எந்த ரயில் நிலையங்களில் இருந்தும் எந்த இடத்துக்கும் செல்ல கணினி முன்பதிவு டிக்கெட் பெறலாம் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. அதுபோல் கணினி மையங்கள் காலை 8 மணிக்கு தொடங்குவதற்கு ஏற்ற வகையில் ரயில்வே நிர்வாகம் கணினி இணையதளங்களில் வசதி செய்துள்ளது.
ஒருசில கணினி மையங்கள் மட்டும் பிற்பகல் 2 மணி வரை இயங்குகின்றன. ஆனால், திருச்செந்தூர் வழித்தடத்தில் உள்ள ரயில் நிலையங்களில் கணினி முன்பதிவு மையங்கள் இருந்தாலும் காலை 8 மணிக்கு முன்பதிவு டிக்கெட்டை பெற முடியாத நிலையில் பயணிகள் உள்ளனர்.
தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளையொட்டி 90 நாள்களுக்கு முன் முன்பதிவு செய்ய வரிசையில் நின்றாலும் ஒரு சில நிமிஷத்தில் முன்பதிவு முடிந்துவிடுகிறது.
இந்த சூழ்நிலையிலும் இப்பகுதியைச் சேர்ந்த பயணிகளுக்கு முன்பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதுபோல் தட்கல் டிக்கெட் பெறவும் முடியாத நிலையும் பயணிகளுக்கு ஏற்பட்டுள்ளது.
இதுபோல் தென்காசி, செங்கோட்டை நீங்கலாக ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், பாம்புகோவில், கடையநல்லூர் ரயில் நிலையங்களிலும் கணினி வசதி இருந்தும் குறிப்பிட்ட நேரத்தில் முன்பதிவு டிக்கெட் பெற முடியாத நிலை உள்ளதாக பயணிகள் ஆதங்கப்படுகின்றனர்.
ரயில் நிலையங்களில் கணினி முன்பதிவு மையங்களை ஏற்படுத்திய ரயில்வே நிர்வாகம் அவற்றை இயக்க தனியாக ஊழியர்களை நியமிக்க வேண்டும். அதைச் செய்யாதவரை கணினி முன்பதிவு மையங்களால் எந்த பயனும் இல்லை என்பதே பயணிகளிடையே தொடரும் மனக்குறை.
நாளை பொது வேலைநிறுத்தம் நெல்லையில் 16 இடங்களில் மறியல்
விலைவாசி உயர்வை கண்டித்து நாளை பொது வேலை நிறுத்தத்திற்கு தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. நெல்லை மாவட்டத்தில் 16 இடங்களில் மறியல் நடக்கிறது.
மத்திய அரசின் தொழி லாளர் விரோத போக்கை கண்டித்தும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்ய வேண் டும், பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்கக் கூடாது. என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் நாளை (7ம் தேதி) ஒருநாள் வேலைந¤றுத்தப் போராட்டத்திற்கு தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன.
நெல்லை மாவட்டத்தில் 5 லட்சம் பீடித் தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்த¤ நாளை வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படுகிறது. இந்த போராட்டத்தில் ஏஐடியூசி, சிஐடியூ, எச்எம்எஸ் ஆகிய தொழிற்சங்கங்கள் பங்கேற்கின்றன.
இதுகுறித்து சிஐடியூ நெல்லை மாவட்ட தலைவர் ராஜாங்கம் கூறுகையில், ‘நெல்லை மாவட்டத்தில் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு ஆதரவாக நெல்லை, ஆலங்குளம், செங்கோட்டை, வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில், முக்கூடல், தென்காசி, அம்பாசமுத்திரம், புளியங்குடி, சிவகிரி, வள்ளியூர், வீரவநல்லூர் உள்ளிட்ட 16 இடங்களில் மறியல் போராட்டம் நடத்தப்படுகிறது. நெல்லையில் சந்திப்பு பஸ் நிலையம் முன்பு மறியல் போராட்டம் நடத்தப்படும்’ என்றார்.
இந்த வேலைநிறுத்தத்தில் பங்கேற்ப தாக நெல்லை, தூத்துக்குடி மாவட்ட வங்கி ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது. சங்கத்தின் பொதுச் செயலா ளர் ரெங்கன் வெளியிட்டுள்ள அறிக்கையில், நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் 2 ஆயிரம் ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்பர். வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு ஆதரவாக நாளை காலை 10 மணிக்கு பாளை. கனரா வங்கி கிளை முன்பு ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
இந்த போராட்டத்தில் இந்தியன் வங்கி, கனராவங்கி, ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூர், கார்ப்பரேஷன் வங்கி உள்ளிட்ட பெரும்பாலான வங்கிகளின் ஊழியர்கள் பங்கேற்பதால் வங்கி பணிகள் பாதிக்கப்படும். ஸ்டேட் பாங்க், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உள்ளிட்ட ஒரு சில வங்கிகள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்கவில்லை.
பொது வேலைநிறுத்தத் தில் சிஐடியூ ஆட்டோ ஒட் டுநர் சங்கம் பங்கேற்பதால் நாளை ஆட்டோக்கள் ஓடாது என மாவட்ட சிஐ டியூ ஆட்டோ ஒட்டுநர்கள் சங்க பொதுச்செயலாளர் ஈஸ்வரமூர்த்தி தெரிவித்தார். வேலைநிறுத்தப் போராட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், சத்துணவு ஊழியர் சங்கம் பங்கேற்ப தாக அறிவித்துள்ளது. இத னால் அரசு அலுவலக பணி கள் பாதிக்கப்படும் என தெரிகிறது.
ஆட்டோக்கள் ஓடாது
போலீசார் குடும்பத்திற்கு இலவச கலர் டி.வி. வழங்க
போலீசார் குடும்பத்திற்கு இலவச கலர் டி.வி. வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர்களது குடும்பத்தினர் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
தமிழக காவல்துறையில் இயக்குனர் முதல் கான்ஸ்டபிள் வரை சுமார் 1 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர். மாநிலம் முழுவதும் 1500க்கும் மேற்பட்ட காவல் நிலையங்களில் பணியாற்றி வரும் அதிகாரிகள் மற்றும் போலீஸ்காரர்களில் 75 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் காவலர் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.
இவர்களது குடும்பத்திற்கு தமிழக அரசு ‘காக்கி‘ நிறத்திலான ரேஷன் கார்டு வழங்கியுள்ளதுடன் ரேஷன் கடைகளில் ரூ.218&க்கு சீனி, அரிசி, கோதுமை, உளுந்தம் பருப்பு, துவரம் பருப்பு, பாமாயில் ஆகியவை வழங்கி வருகிறது. போலீசார் குடும்பத்திற்கு பொதுமக்களுக்கு கிடைக்கும் சலுகைகள் போல் சில சலுகைகள் கிடைப்பதில்லை.
குறிப்பாக தமிழகம் முழுவதும் முதல்வர் கருணாநிதி உத்தரவுப்படி மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, பஞ்சாயத்துகள் என அனைத்து பகுதிகளுக்கும் இலவச கலர் டி.வி. வழங்கப்பட்டு வரும் நிலையில் போலீசார் குடும்பங்களுக்கு இலவச கலர் டி.வி. இன்னமும் வழங்கப்படவில்லை.
நெல்லை மாவட்டத்தில் உள்ள 68 போலீஸ் நிலையங்களுக்குட்பட்ட காவலர் குடியிருப்புகளில் வசித்து வரும் போலீசார் குடும்பத்திற்கு இதுவரை அரசின் இலவச கலர் டி.வி. வழங்கப்படவில்லை. இக்குடியிருப்புகளையொட்டி உள்ள பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கும் இலவச கலர் டி.வி. வழங்கியுள்ள நிலையில் போலீசார் குடும்பத்திற்கு டி.வி. வழங்கப்படவில்லை.
பொதுமக்களின் நண்பன் என்றழைக்கப்படும் காவல் துறையினருக்கு இலவச கலர் டி.வி. வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென போலீசார் குடும்பத்தினர் எதிர்பார்ப்பில் உள்ளனர். எங்களுக்கும் இலவச டிவி வேண்டும் போலீசார் குடும்பத்தினர் எதிர்பார்ப்பு
தென்காசியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநாட்டு பேரணி
சமூக பாதுகாப்புடன் கூடிய வேலை, சேது சமுத்திர திட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும், சமச்சீர் கல்வியை அமல் படுத்த வேண்டும், தென் காசியில் அரசு கலைக்கல்லூரி வேண்டும், அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் அனைத்து வசதிகளும் மேற்கொள்ள வேண்டும், சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலாளிகளை அனுமதிக்கக்கூடாது உள்ளிட்ட பல்வெறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் 13வது மாவட்ட மாநாடு குற்றாலத்தில் நேற்று தொடங்கி 2 நாட்கள் நடக்கிறது.
மாநாட்டை முன்னிட்டு நேற்று தென்காசியில் பேரணி, கலைவிழா, பொதுக்கூட்டம் ஆகியவை நடந்தது. மாவட்ட தலைவர் வேலுமயில் தலைமை வகித்தார். வட்டார தலைவர் மணிகண்டன் வரவேற்றார். மாநில தலைவர் ரமேஷ்பாபு, மாவட்ட செயலாளர் பிரபு, துணை செயலாளர் ஸ்ரீராம் ஆகியோர் பேசினர்.
துணைத்தலைவர்கள் முருகன், ராஜேஸ், கிருஷ்ணகுமார், நாகதேவன், துணை செயலாளர்கள் துரைராஜ், சுரேஷ், ராஜகுரு, ஆறுமுகலட்சுமி, சாந்தி, தாலுகா செயலாளர் சித்திக், சி.ஐ.டி.யூ.மாவட்ட இணை செயலாளர் வேல்முருகன், பால்ராஜ், மைதீன், லெனின் உட்பட பலர் கலந்து கொண்டனர். பேரணி தென்காசி நடுபல்க் முன்பிருந்து தொடங்கி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்றது.