குப்பையிலிருந்து மின்சாரம்: திட்டத்தை செயல்படுத்த கவுன்சிலர் கோரிக்கை
கடையநல்லூர் நகராட்சியில் குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என, உறுப்பினர் ராமநாதன் கோரிக்கை விடுத்தார். இதுகுறித்து நடவடிக்கை மேற்கொள்வதாக ஆணையர் பதிலளித்தார். கடையநல்லூர் நகர்மன்றக் கூட்டம், தலைவர் இப்ராஹிம் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. ஆணையர் அப்துல்லத்தீப், துணைத் தலைவர் காளிராஜ், பொறியாளர் அய்யனார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதில், கடையநல்லூர் நகராட்சியிலுள்ள தெருவிளக்கு, குடிநீர் உள்ளிட்ட பயன்பாட்டுக்காக செலவிடப்படும் மின் செலவு ஆண்டுக்கு ரூ. 32.20 லட்சம் ஆகிறது. அதேநேரம், கடையநல்லூர் நகராட்சியில் நாளொன்றுக்கு சுமார் 24.2 டன் குப்பை கிடைக்கிறது. 10 டன் குப்பை மூலம் சுமார் 1,200 யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். எனவே, நகராட்சியில் குப்பை மூலம் மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும். அப்படிச் செய்தால் நகராட்சிக்கு ஆண்டுக்கு ரூ. 62.40 லட்சம் வருவாய் கிடைக்கும் என, உறுப்பினர் ராமநாதன் தெரிவித்தார். இதை மற்ற உறுப்பினர்களும் வரவேற்றனர். ஆணையர்: இது நல்ல திட்டம். இதுகுறித்து அரசுக்கு உரிய கருத்துரு அனுப்பி வைக்கப்படும். நகராட்சி அலுவலர்கள் நகர்மன்ற உறுப்பினர்களை மதிப்பதில்லை என, உறுப்பினர்கள் பாதுஷா, பாலசுப்பிரமணியன் ஆகியோர் கடும் புகார் தெரிவித்தனர். இதுகுறித்து நகராட்சி அலுவலர்களிடம் பேசியுள்ளேன், பொதுமக்கள் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்களிடம் அலுவலர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளேன் என்றார் ஆணையர். மரியாதை கொடுக்க தெரியாத அலுவலர்கள் இடமாறுதல் பெற்றுச் செல்லுமாறு, தலைவர் கடிந்து கொண்டார். வாரச்சந்தையிலுள்ள ஆக்கிரமிப்புக்களை அகற்ற வேண்டும் என, ராமநாதன், மைதீன் ஆகியோர் புகார் தெரிவித்தனர். மேலும் வாரச்சந்தையை செயல்படுத்த வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர். நடவடிக்கை எடுக்கப்படும் என, ஆணையர் பதிலளித்தார்.
பட்ஜெட்டில் ரூ. 38 லட்சம் பற்றாக் குறை
கடையநல்லூர் நகராட்சிக்குரிய 2010-2011 ஆம் ஆண்டிற்குரிய உத்தேச பட்ஜெட்டில் சுமார் ரூ.38 லட்சம் பற்றாக்குறை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நகராட்சிக்கு சொத்துவரி மூலம் ரூ.1.10 கோடியும், தொழில் வரி மூலம் ரூ.11.5 லட்சமும், தொழில் உரிமக் கட்டணம் மூலம் ரூ.1.04 லட்சமும், மாநில நிதிக்குழு மானியம்(ஊதிய வகை) மூலம் சுமார் ரூ.2.64 கோடியும், தினசரி சந்தை மூலம் ரூ.5.61 லட்சமும், வாரச்சந்தை மூலம் ரூ.1.23 லட்சமும், அபிவிருத்திக் கட்டணம் மூலம் ரூ.10.56 லட்சமும், சாலை பராமரிப்புக் கட்டணம் மூலம் ரூ.12.50 லட்சமும், வைப்பு நிதிக்கான வட்டி மூலம் ரூ.14.45 லட்சமும், குடிநீர் கட்டணம் மூலம் ரூ.72 லட்சமும், சொத்து பதிவுக் கட்டண மானியம் மூலம் ரூ.26 லட்சம் உள்பட பல்வேறு இனங்கள் மூலம் நகராட்சிக்கு ஆண்டொன்றுக்கு உத்தேசமாக சுமார் ரூ.5.66 கோடி வருவாய் கிடைப்பதாக பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது. ஊதியம் மற்றும் இதர படிகளுக்கு ரூ.2.25 கோடியும், சாலை வேலைகளுக்கு ரூ.50 லட்சமும், மழைநீர் வடிகால் கட்டுவதற்கு ரூ.45 லட்சமும், அபிவிருத்திப் பணிகளுக்கு ரூ.35 லட்சமும், ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியத்திற்கு ரூ.39.5 லட்சமும், தெரு விளக்குகளுக்கான மின்கட்டண வகைக்கு ரூ.22.5 லட்சமும், தெருவிளக்கு பராமரிப்புப் பணிக்கு ரூ.10.20 லட்சமும், குடிநீர் பணியிடத்திற்கு மின் கட்டணம் ரூ.9.7 லட்சமும், தனியார் துப்புரவுப் பணிக்கு ரூ.22 லட்சமும், திட்டக் கடன்களுக்கு தவணைத் தொகை ரூ.30 லட்சமும், குடிநீர் வடிகால் வாரியத்திற்கு ரூ.46 லட்சமும், மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு ரூ.4.5 லட்சம் உள்ளிட்ட வகைகளின் உத்தேச செலவினம் ரூ.6.04 கோடியாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தேச பட்ஜெட்டில் பற்றாக்குறை ரூ.38,36,795 ஆக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடையநல்லூரில் இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்
கடையநல்லூரில் இந்து முன்னணியினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர். சோழபுரம் இந்து முன்னணி பிரமுகர் மூர்த்தி கொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும், கொலையாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும் கடையநல்லூர்
தொலைபேசி நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்து முன்னணி நகரத் தலைவர் சிந்தாமணி முதலியார் தலைமை வகித்தார். இதில் மாவட்டச் செயலர் சிவா, காந்திமதிநாதன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தென்காசியில் சர்வீஸ் ரோடு: அ.தி.மு.க.வலியுறுத்தல்
தென்காசியில் சர்வீஸ் ரோடு அமைக்க வேண்டும் என அ.தி.மு.க. சார்பில் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.அ.தி.மு.க.மாநில பொதுக்குழு உறுப்பினர் ஷமீம், தென்காசி நகராட்சி அ.தி.மு.க.கவுன்சிலர்கள் முருகன்ராஜ், வெள்ளப்பாண்டி, சுடலை, கிருஷ்ணமூர்த்தி, கசமுத்து ஆகியோர் நெல்லை மாவட்ட கலெக்டர் ஜெயராமனிடம் கொடுத்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:தென்காசியில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி நடக்கிறது. ரயில்வே கேட்டிற்கு வடக்கே புதிய பஸ்ஸ்டாண்ட், மாவட்ட அரசு தலைமை ஆஸ்பத்திரி, அரசு மேல்நிலைப் பள்ளி, வட்டார போக்குவரத்து அலுவலகம் உள்ளது. பொதுமக்கள் அத்தியாவசிய தேவைக்கான ரோடுகள் மேம்பாலம் காரணமாக அடைக்கப்பட்டுள்ளது. மாற்று வழிகள் முறையான ஏற்பாடுகள் செய்யாமல் சிறிய மண் ரோட்டில் இரு சக்கர வாகனங்கள், ஆட்டோகள் முதலிய வாகனங்கள் செல்வதற்கு திருப்பி விடப்பட்டுள்ளது. இந்த ரோடு அவசர சிகிச்சை நோயாளிகள் செல்வதற்கு ஏற்றது அல்ல. குண்டும், குழியுமாக மோசமான நிலையில் இந்த ரோடு உள்ளது.கடந்த வாரம் தென்காசி கீழப்புலியூரை சேர்ந்த சரஸ்வதி (25) என்ற பெண் பிரவசத்திற்காக அரசு ஆஸ்பத்திரிக்கு இலஞ்சி, குத்துக்கல்வலசை வழியாக அழைத்து செல்லப்பட்டதால் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. வாகன ஓட்டிகள், பயணிகள், நோயாளிகள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி தென்காசியில் உடனடியாக சர்வீஸ் ரோடு அமைக்கப்பட வேண்டும்.மேலும் தென்காசி அரசு பழைய ஆஸ்பத்திரியில் அவசர சிகிச்சை பிரிவும், பிரவச மருத்துவ பிரிவும் அமைக்க வேண்டும். தென்காசி புதிய பஸ்ஸ்டாண்டில் இருந்து பழைய பஸ்ஸ்டாண்ட் செல்லும் ஆட்டோகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர். இதுபற்றியும் மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை மனுவில் அ.தி.மு.க.வினர் கூறியுள்ளனர்.
நல்லமணி கல்லூரி விடுதி தின விழா
தென்காசி கொடிக்குறிச்சி ஸ்ரீராம் நல்லமணி யாதவா கல்லூரி விடுதி தின விழா நடந்தது.தென்காசி கொடிக்குறிச்சி ஸ்ரீராம் நல்லமணி யாதவா அனைத்து கல்லூரிகளின் விடுதி தின விழா நடந்தது. கல்லூரி தாளாளர் மணிமாறன் தலைமை வகித்தார். பத்மாவதி மணிமாறன் முன்னிலை வகித்தார். விடுதி காப்பாளர் பேராசிரியை சந்திரா வரவேற்றார். கல்வியியல் கல்லூரி முதல்வர் இளம்பரிதி, பேராசிரியர் தங்கராஜ், மருந்தியல் கல்லூரி துணை முதல்வர் ரவிச்சந்திரன், ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் சுரேஷ் ஜான் கென்னடி வாழ்த்தி பேசினர்.விழாவில் மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடந்தது. பரிசுகள் வழங்கப்பட்டது. மாணவி கலா நன்றி கூறினார்.
தென்காசியில் இன்று மறியல் போராட்டம்
விலைவாசி உயர்வை கண்டித்து தென்காசியில் இன்று (5ம் தேதி) மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் மறியல் போராட்டம் நடக்கிறது.விலை வாசி உயர்வை கண்டித்தும், தொழிற்சங்க உரிமையை பறிப்பபை கைவிட கோரியும், எட்டு மணி நேர வேலையை உத்தரவாத படுத்திட கோரியும், முறைசாரா, கட்டுமான தொழிலாளர்களுக்கு நலவாரிய அட்டை மற்றும் பணப்பயன்கள் விரைந்து கிடைத்திட மத்திய, மாநில அரசை கண்டித்து மத்திய தொழிற்சங்கங்களின் சார்பில் இன்று (5ம் தேதி) காலை 10 மணிக்கு தென்காசி பழைய பஸ்ஸ்டாண்ட் முன்பு மறியல் போராட்டம் நடக்கிறது.போராட்டத்திற்கு சி.ஐ.டி.யு.மாவட்ட இணை செயலாளர் வேல்முருகன், ஏ.ஐ.டி.யு.சி.மாவட்ட தலைவர் ஆறுமுகம், ஏ.ஐ.சி.சி.டி.யு.சிவில் சப்ளை மாவட்ட தலைவர் செல்வராஜ், பாரத காந்திஜி பொது தொழிலாளர்கள் சங்க மாவட்ட தலைவர் ராஜேந்திரகாந்தி தலைமை வகிக்கின்றனர்.சி.ஐ.டி.யு.பொறுப்பாளர்கள் தாணுமூர்த்தி, லெனின்குமார், கனகராஜ், சுப்பிரமணியன், பச்சையப்பன், மைதீன், ஏ.ஐ.டி.யு.சி. பொறுப்பாளர்கள் கணேசன், ஜெயராமன், நல்லையா, கிட்டப்பா, இசக்கிராஜ், ஏ.ஐ.சி.சி.டி.யு.பொறுப்பாளர் மீனாட்சி பாண்டியன் முன்னிலை வகிக்கின்றனர். போராட்டத்தில் திரளான தொழிலாளர்கள் கலந்து கொள்ளும்படி போராட்ட குழுவினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த7ம் தேதி மதுக்கடை மறியல் போராட்டம்: மனித நேய மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி நெல்லை மாவட்டத்தில் வரும் 7ம் தேதி நெல்லை, தென்காசியில் மதுக்கடைகள் முன் மறியல் போராட்டம் நடத்தப்படும் என மனித நேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் மைதீன் சேட்கான் கூறினார்.இதுகுறித்து நெல்லையில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:மதுவை ஒழிக்கவேண்டும் என தேசத் தலைவர்களான காந்தியடிகள், அண்ணாத்துரை, பெரியார், காயிதே மில்லத் போன்றவர்கள் போராடினர். ஆனால் தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன. இதை தடுக்க பூரண மதுவிலக்கை அமல்படுத்தவேண்டும் என மனித நேய மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது. ஆனால் தமிழக அரசு மதுவிற்பனையை ஊக்கப்படுத்தி வருகிறது. கோடை காலத்தை சமாளிக்க 3.50 லட்சம் பீர் தயாரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதை மனித நேய மக்கள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி வரும் 7ம் தேதி தமிழகம் முழுவதும் மதுக்கடைகள் முன்பு 100 இடங்களில் மறியல் போராட்டம் நடத்த மனித நேய மக்கள் கட்சி முடிவு செய்துள்ளது. நெல்லை மாவட்டத்தில் நெல்லை, தென்காசியில் இந்த மறியல் போராட்டம் நடக்கிறது. நெல்லை ஜங்ஷன் ரயில்வே ஸ்டேஷன் ரோடு முன்பு 7ம் தேதி மாலை 3 மணிக்கு மனித நேய மக்கள் கட்சி உயர்மட்டக் குழு உறுப்பினர் ரகமதுல்லா தலைமையிலும், தென்காசி பஸ்ஸ்டாண்டில் மாவட்ட பொருளாளர் ரசூல்மைதீன் தலைமையிலும் மறியல் போராட்டம் நடக்கிறது. இந்த போராட்டத்தில் பெண்கள் உட்பட 2 ஆயிரம் பேர் பங்கேற்பர்.மதுகடை மறியல் போராட்டத்தை தொடர்ந்து விலைவாசி உயர்வை கண்டித்து மனித நேய மக்கள் கட்சி போராட்டம் நடத்தும்.இவ்வாறு மாவட்ட தலைவர் மைதீன் சேட்கான் கூறினார்.பேட்டியின் போது மாவட்ட பொருளாளர் ரசூல் மைதீன், துணைச் செயலாளர் சுல்தான் மைதீன், தமுமுக மாவட்ட தலைவர் மைதீன்பாரூக், செயலாளர் உஸ்மான்கான், பொருளாளர் செய்யதுஅலி உடனிருந்தனர்.
ஆயக்குடி கல்லூரியில் விளையாட்டு போட்டிகள்
ஆய்க்குடி ஜெ.பி.கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மூன்றாமாண்டு விளையாட்டு போட்டிகள் நடந்தது.நிகழ்ச்சிக்கு கல்லூரிகளின் இயக்குநர் ராமநாதன் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் விஜயலெட்சுமி வரவேற்றார். ஒலிம்பிக் தீபத்தை இயக்குனர் ஏற்றி வைத்து போட்டிகளை துவக்கி வைத்தார். போட்டியில் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை ஆண்கள் பிரிவிற்கு பி.எஸ்.சி. (இ.சி) துறையும், பெண்கள் பிரிவிற்கு பி.ஏ. (இன்ஜி) துறையும் பெற்றது. இதில் ஆண்கள் பிரிவில் ஆறுமுகராஜாவும், பெண்கள் பிரிவில் ராணியும் சாம்பியன் பட்டத்தினை வென்றனர்.கல்லூரியின் பணியாளர்களுக்காக நடத்தப்பட்ட போட்டியில் அலுவலக பணியாளர்கள் ஆரோக்கியமேரி முதலிடமும், சங்கரி இரண்டாமிடமும் பெற்றனர். உடற்கல்வி இயக்குநர் சத்தியதிருவளன் நன்றி கூறினார்.போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவ, மாணவிகளையும் கல்லூரியின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் எம்.எல்.ஏ., துணைத் தலைவர் வினோத், கலை கல்லூரி செயலர் சண்முகம், இயக்குநர் ராமநாதன், இன்ஜி.,கல்லூரி செயலர் ராஜகோபால், கலை கல்லூரி முதல்வர் விஜயலெட்சுமி பாராட்டி பேசினர்.
தென்காசி சிற்றாற்றில் ஆண் உடல் மீட்பு
தென்காசி சிற்றாற்றில் அழுகிய நிலையில் ஆண் உடல் மீட்கப்பட்டது.தென்காசி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே சிற்றாற்றில் ஆண் உடல் அழுகிய நிலையில் மிதப்பதை அப்பகுதியில் குளிக்க சென்றவர்கள் பார்த்துள்ளனர். இறந்தவருக்கு 55 வயது இருக்கும். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என உடனடியாக தெரியவில்லை. இறந்தவரின் உடலை மீன்கள் கடித்து குதறியுள்ளது.இதுபற்றி தென்காசி வி.ஏ.ஓ.அருள்லிங்கம் தென்காசி போலீசில் புகார் செய்தார். ஏட்டு முருகன் வழக்கு பதிவு செய்தார். இறந்தவரின் உடல் மிகவும் மோசமான நிலையில் காணப்பட்டதால் அதே இடத்தில் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் நயினார் விசாரணை நடத்தி வருகிறார்.